செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சைபர் க்ரைம் ஜூனியர்: பழிவாங்கும் போர்னோகிராபி!

காதலில் விழுந்தோ, நிச்சயதார்த்தம் முடிந்தோ, நெருங்கிப் பழகும் ஒரு ஜோடி, ‘இந்த உறவு திருமணத்தில்தான் முடியும்’ என நம்புகிறது. மனதால் பலர் நெருங்குகிறார்கள்; சிலர், உடலாலும் நெருங்குகிறார்கள். எல்லா கொண்டாட்டங்களையும் படம்பிடித்து ரசிக்கும் சோஷியல் மீடியா யுகம் இது. அதனால், அந்தரங்கத் தருணங்களையும் கேமராவுக்குள் சிறைப்பிடிக்கிறார்கள். பின்பு, அந்தப் பையனிடம் ஏதோ தப்பு இருப்பது தெரிந்து அந்தப் பெண் ஒதுங்கினால், அந்தப் பெண்ணைப் பழிவாங்கும் ஆயுதமாக போர்னோகிராபி மாறுகிறது. அந்தரங்கத் தருணங்களை இணையத்தில் பதிவேற்றி பலரின் பார்வைக்கும் வைத்து, அந்தப் பெண்ணை மனதால் சாகடிக்கிறார்கள்; அந்த வலியைத் தாங்கமுடியாமல் அவள் உடலாலும் செத்துப்போகிறாள்.  

இதுபோன்ற Revenge Porn ஆயுதத்தால் அவமானப்பட்டு, ஒரு ஆண் இறந்ததாக எங்கும் செய்தி இல்லை. இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67A, இதுபோன்ற ஆபாசப்படங்களைப் பதிவேற்றுவதும் பகிர்வதும் ஜாமீனில் வெளியில் வரமுடியாத குற்றம் என்கிறது. இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆனால், ஒரு பெண் இதற்காகப் புகார் செய்யச் செல்லும்போதே, இந்த விஷயம் பூதாகரமாக்கப்பட்டு, பலருக்கும் தெரிந்து, அவமானப்பட்டு, குடும்பத்தின் பழிச்சொல்லுக்கு ஆளாகி... கடைசியில் தற்கொலையைத் தவிர, வேறு வாய்ப்பு அவளுக்குத் தெரிவதில்லை. 

இதுபோன்ற அந்தரங்கப் படங்கள் பதிவேற்றப்படுவதைத் தடுக்க, முதல் படியை எடுத்துவைத்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். ஆஸ்திரேலியாவில் இதைப் பரிசோதனை முயற்சியாக முதலில் செய்கிறார்கள். தனது அந்தரங்கமான தருணம், இணையத்தில் பகிரப்படலாம் என்ற அச்சம் யாருக்காவது இருந்தால், அவர்கள் தங்களின் நிர்வாணப் படத்தை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை வைத்து ஒப்பிட்டு, அதேபோன்ற தோற்றமுள்ள படங்கள், வீடியோக்கள் தங்கள் தளத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றிவிடும். அகற்றியதை மீண்டும் யாராவது பதிவேற்றினாலும், கண்டுபிடித்து அழிக்க முடியும். அப்படிப் பதிவேற்றும் நபர்களின் கணக்குகளையும் முடக்கிவைத்துவிடும். ‘ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பும் படமே இணையத்தில் பகிரப்பட்டால் என்ன ஆவது?’ என்ற பயம் எழலாம். சில தருணங்களில் நம்பித்தான் ஆகவேண்டும். 

ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற பிறரின் அந்தரங்கக் காட்சிகளை மீள்பதிவு (Re Post) செய்வதையும் பகிர்வதையும் (Share) தடுக்க, உலகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்காக இயங்கும் 150 இயக்கங்களுடன் இணைந்து சில முயற்சிகளை ஃபேஸ்புக் எடுத்துள்ளது.

ஒருவருக்குத் தெரியாமல் அவர் குறித்த ஆபாசக்காட்சி பதிவேற்றப்பட்டால், அதில் இடம்பெற்றிருக்கும் நபரோ, வேறொருவரோ ஃபேஸ்புக்கின் ‘ரிப்போர்ட் டூல்’ (Report Tool) மூலம் அதுபற்றிப் புகார் அளிக்கலாம். புகார்களின் அடிப்படையில் அந்தப் படத்தையோ, காட்சியையோ பரிசீலிக்க  நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது ஃபேஸ்புக். அவர்கள் அதைப் பரிசீலித்து, ‘புகைப்பட கண்டறிதல் மென்பொருளைப் (Photo Recognition Software) பயன்படுத்தி, அதை மீள்பதிவு செய்வதையும் பகிர்வதையும் தடுக்கிறார்கள். எந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து அது பதிவேற்றப்படுகிறதோ, அந்தக் கணக்கையும் உடனடியாக முடக்கிவிடுகிறார்கள்.

இதை ஃபேஸ்புக்கில் மட்டுமல்லாது மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். வாட்ஸ் அப்பில் வேறு தொழில்நுட்பம் இருப்பதால், அதில் இந்தச் செயல்பாட்டை இப்போதைக்குக் கொண்டுவர முடியவில்லை என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இருந்தும், இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்துமே மீள்பதிவுகளையும், பகிர்தலையும் மட்டுமே தடுக்கின்றன; பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. 

அதேசமயம், ஆபாச இணையதளங்களிலோ, வேறு தளங்களிலோ இந்தக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதைத் தடுக்க எந்தத் தொழில்நுட்பமும் கிடையாது. சைபர் க்ரைம் போலீஸாரே இவை பற்றி முறைப்படி புகார் செய்து நடவடிக்கை எடுப்பதற்குள், அது வேறு பல தளங்களில் பகிரப்பட்டு விடுகின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் செய்வது போன்ற பாதுகாப்பு வழிகளை மற்ற எல்லோரும் செய்வதே இதற்குத் தீர்வு. 

அதைவிட நல்ல தீர்வுகளும் இரண்டு உண்டு. ஒன்று, என்னதான் அன்பால் கட்டாயப்படுத்தினாலும் இப்படிப்பட்ட நெருக்கமான தருணங்களைத் தவிர்த்துவிடுகிற பெண்ணின் உறுதி. இரண்டு, மோசமான எதிரியாக மாறிவிட்டாலும் அந்தப் பெண்ணை சகமனுஷியாகக் கருதி கண்ணியம் செய்கிற ஆண்களின் மனசு. 

- இரா.கலைச்செல்வன்


‘சைபர்’ இழப்பு!

சைபர் தாக்குதல்களால் ஏற்படும் இழப்பு, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2021-ம் ஆண்டில் மட்டுமே 392 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இதனால் இழப்பு ஏற்படும் என்று கணித்துள்ளார்கள். 

‘சைபர்’ செலவு!

 சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, அரசுகளும் நிறுவனங்களும் செய்யும் செலவுகள் அதிகரித்துவருகின்றன. 2021-ல் இணையப் பாதுகாப்புக்காக உலக நாடுகளும் நிறுவனங்களும் செலவழிக்கும் தொகை, சுமார் 65 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.


எகிறும் இணையவாசிகள்!

 உலகெங்கும் இணையத்தைப் பயன்படுத்துகிற மக்களின் எண்ணிக்கை, 380 கோடி. இது உலக மக்கள்தொகையில் 51 சதவிகிதம். 2015-ம் ஆண்டு 200 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தினர். ஸ்மார்ட் போன்கள் பெருகியதால், இந்த எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் சுமார் இரண்டு மடங்கு உயர்ந்தது. வரும் 2022-ம் ஆண்டில் 600 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். கிட்டத்தட்ட அப்போதைய உலக மக்கள்தொகையில் 75 சதவிகிதம். இத்தனை பேரையும் சைபர் க்ரைம் ஆசாமிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, டெக் வல்லுநர்களுக்கு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...