புதன், 7 மார்ச், 2018

f

எது சொந்தக் கருத்து?

‘இன்று லெனின் சிலை; நாளை பெரியார் சிலை’ என்று பதிவிட்டிருக்கிறார் பாஜகவின் எச்.ராஜா. அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது அவரது சொந்தக் கருத்து என்றும் இது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்றும் கூறி சமாளித்திருக்கிறார்.மகாத்மா காந்தியின் கொலையைக் கொண்டாடியவர்கள், கொலையாளி கோட்சேயை பூஜிப்பார்கள், இப்போதும் கூட எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று கூறுபவர்கள் தான் எச்.ராஜா, தமிழிசை ஆகியோரின் தலைமைப் பீடமான ஆர்எஸ்எஸ். இவர்களது முழக்கமான இந்து ராஷ்டிரத்துக்கு எதிரி என நினைப்பவர்களை அவர்களது அமைப்பை- கொள்கையை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பதை விடுத்து வன்முறை வெறியாட்டம், கொலை ஆகியவற்றின் மூலம் அழித்து விடத்துடிப்பதே அவர்களின் செயல்பாடாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பாபர் மசூதி இடிப்பு. அன்றைய தினம் கூட பாஜக சார்பில் இப்படித்தான் சொல்லப்பட்டது. பின்னர் அதன் பரிவார அமைப்புகள் தாங்கள் தான் செய்தோம் என்று பெருமை பேசின.
இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ‘அறிவாளி’ எச்.ராஜா. இவரது வாதம் லெனின் வெளிநாட்டுக்காரர் என்பது. ஆனால் இவர்களின் ஆர்எஸ்எஸ், இந்துமகாசபையின் தலைவர்களான கோல்வால்கர், மூஞ்சே போன்றவர்கள் எல்லாம் இத்தாலியின் பாசிஸ்ட் முசோலினியை, ஜெர்மனியின் நாஜிவெறியன் ஹிட்லரை தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, அது என்னவாம்? கும்பலைத் திரட்டுவதும் அதை மனரீதியாக தயார்ப்படுத்துவதும் அதை வெறியூட்டி வன்முறையில் இறங்க வைப்பதும் தானே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் செயல்முறை. அப்படித்தானே குஜராத்தில் சிறுபான்மை மதத்தவரை மோடி-அமித் ஷா கூட்டணியின் தலைமையில் கொன்று குவித்தார்கள். அப்போதெல்லாம் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிடவும் செய்தார்கள். அதைத்தானே திரிபுராவில் இப்போதும் செய்திருக்கிறார்கள்.அத்தகைய வன்முறை வெறியில், மதவெறி மமதையில் தான் எச்.ராஜா தன் உள்ளக் கிடக்கையை அண்மைக் காலமாகவே வெளிப்படுத்தி வருகிறார். பெரியார் சிலையை செருப்பாலடிப்பேன் என்பதும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்பதும் அதுதானே! இத்தகைய கலவரத்தைத் தூண்டும் வன்முறைப் பேச்சுக்காகவே தமிழக காவல்துறை எச்.ராஜா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய பேச்சுக்கு பொருள் இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த நாட்டில் வாழும் எச்.ராஜா போன்றவர்களின் பிரிவினை, வன்முறைப் பேச்சுக்கு கட்டாயம் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தாக வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...